சமன் ஏக்கநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு பயணத்தின் போது அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று(11) அறிவித்தார்.குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் 02ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் இன்று உத்தரவிடப்பட்டது.166 இலட்சம் ரூபா அரச நிதியை துஷ்பிரயோகம் செய்து இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சமன் ஏக்கநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து விளக்கமளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 02ஆவது சந்தேகநபர் சிறைச்சாலையில் இருந்தபோது வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் இவ்வாறு அறிவித்தார்.கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி வுல்வர்ஹெம்டன் பல்கலைக்கழகத்திற்கு இந்த பட்டமளிப்பு விழா தொடர்பான 9 வினாக்கள் அடங்கிய பட்டியல் ஃபேக்ஸ் மற்றும் பதிவுத்தபால் மூலம் அனுப்பப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.இதன்போது விசாரணை தொடர்பாக ஏதேனும் கட்டளைகளை எதிர்பார்க்கிறீர்களா என மேலதிக சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதவான் வினவினார்.அதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சர்ச்சைக்குரிய இந்த பயணம் தொடர்பாக 2023 நவம்பர் முதலாம் திகதியிடப்பட்ட கடிதத்திலுள்ள கையெழுத்தை பரிசோதிக்க அதனை அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.இந்த வேண்டுகோளை கவனத்திற்கொண்ட நீதவான் அதற்கு அனுமதி வழங்கினார்.அதனை தொடர்ந்து 02ஆவது சந்தேகநபரான சமன் ஏக்கநாயக்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ பிணை கோரிக்கையை முன்வைத்தார்.தனது சேவைபெறுநர் நிதியை அங்கீகரிக்கும் பணியை மாத்திரமே செய்ததாகவும் அதன் மூலம் அவர் எவ்வித இலாபமோ அல்லது சலுகையோ பெறவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.இந்த பிணை கோரிக்கைக்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிசும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, விளக்கமறியலில் வைக்கப்படும் ஒரு சந்தேகநபரின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதாகவும் இவ்வாறான நிலையில் சந்தேகநபரின் நடத்தை குறித்து அவதானிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.இல்லையெனில் அது குறித்து நீதிமன்றம் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும் எனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.பிணை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
