கம்மெத்த ‘Care & Dare’ கொத்மலையில் ஆரம்பம்
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் கம்மெத்த 'Care & Dare' மற்றுமொரு புதியத் திட்டத்தை இன்று ஆரம்பித்தது.கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய பாடசாலையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.டித்வா புயல் மற்றும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்காக கம்மெத்தவினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டம் இதுவாகும்.இன்று காலை 8.30 க்கு ஆரம்பமான கம்மெத்த 'Care & Dare' திட்டம் இன்றைய நாள் முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இங்கு மருத்துவ சேவைகள், ஆலோசனை சேவைகள், சட்ட ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன் நிவாரண உதவியும் வழங்கப்படுகின்றது.சுகாதார அமைச்சினால் மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதுடன் இதற்காக விமானப்படை மருத்துவர்கள் இணைந்துள்ளனர்.பேரிடர் நிலைமையினால் வருமானம் மற்றும் சுயதொழிலை இழந்த மக்களுக்கான விசேட ஆலோசனை சேவைகளும் செயற்படுத்தப்படுவதுடன் இதற்காக தேசிய பயிற்சி, தொழிற்துறை பயிற்சி அதிகார சபை கம்மெத்தவுடன் இணைந்துள்ளது.பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கம்மெத்த மூலம் உலருணவுப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மக்களுக்கான சுகாதாரப் பொதிகளும் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
