கழிவுநீர் மற்றும் திண்மக் கழிவுகளை அகற்றும் விடயத்தில் நிறுவன அல்லது பிரதேச எல்லைகளுக்குள் மட்டுப்படாது தொழிற்படுங்கள் அடுத்த ஆண்டின் ஜூன்-ஜூலை மாதங்களுக்கு முன்னரே விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்களை ஆரம்பியுங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் வரைபடங்களைக் கவனிக்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகக் காணப்படுவதால், அதைக் குறைப்பதற்காக அடுத்த ஆண்டின் ஜூன் மாதத்திற்கு முன்னரே விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கினார். செப்டெம்பர் 15ஆம் திகதி, கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்திற்குள் கழிவுநீர் அகற்றல் மற்றும் திண்மக் கழிவுச் சேகரிப்பு தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால், அதனை மிக விரைவில் தீர்க்க வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது நிறுவன அல்லது பிரதேச எல்லைகளுக்குள் மட்டுப்படாமல் தொழிற்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இது நாடு முழுவதும் எதிர்கொள்ளும் ஒரு நெருக்கடியான நிலைமை என்பதால், கொழும்பு மாவட்டத்தின் கழிவுநீர் மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை ஒரு தேசியத் தேவையாகக் கருதித் தொழிற்படுமாறு அவர் அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். அத்துடன், கழிவுநீர் மற்றும் திண்மக் கழிவுகளைச் சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது ஒரு தேசியத் தேவை என்பதை மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதன் மூலம் அவர்களது சாதகமான பதில்களையும் முழுமையான ஒத்துழைப்பையும் பெற முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த கொழும்பு மாவட்ட முதன்மை சுகாதார மருத்துவ அதிகாரி, செப்டெம்பர் மாதத்தின் முதலாவது வாரத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், கொழும்பு மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாகத் தலையிட்டு பெரும் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக விவசாயச் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அந்த ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் மக்களுக்கு மிக விரைவாகச் சேவைகளை வழங்குவதற்குப் பெரும் பக்கபலமாக அமைந்ததாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணஆரச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆரச்சி, அருண பனாகொட, தேவானந்த சுரவீர, சுசந்த தொடாவத்த, சமன்மலி குணசிங்க உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள், கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக்க குமார உள்ளிட்ட அரச நிறுவனத் தலைவர்கள், அனைத்துப் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரதமர் ஊடகப் பிரிவு


















