ரணிலின் லண்டன் பயணம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
166 இலட்சம் ரூபா பொதுப் பணத்தை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டில் போதுமான சாட்சியங்கள் உள்ளதால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(29) சட்ட மாஅதிபருக்கு அறிவித்துள்ளது.இந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.166 இலட்சம் ரூபா பொதுப் பணத்தை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டில், ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு இன்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.சுகவீனம் காரணமாக பிணையில் உள்ள ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டார் என அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன அறிவித்தார்.இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் மேலும் சில முக்கிய விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவின் வாக்குமூலம் மற்றும் Wolverhampton பல்கலைக்கழகத்தில் கோரப்பட்ட விபரங்களுக்கு மின்னஞ்சல் மூலம் கிடைத்த பதில் ஆகியவற்றை குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.Wolverhampton பல்கலைக்கழகத்தின் பதிலின் படி, ரணில் விக்கிரமசிங்கவின் பயணம் 2023 செப்டம்பர் 22 அன்று அந்த பல்கலைக்கழகத்தில் மைத்ரி விக்கிரமசிங்கவிற்கு கௌரவ பேராசிரியர் பட்டம் வழங்கும் நிகழ்வு மற்றும் அதனுடன் இணைந்த மதிய உணவு விருந்தில் கலந்துகொள்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் எந்தவொரு அரச தலையீடும் இருக்கவில்லை என்பதும் 2023 செப்டம்பர் முதலாம் திகதியிடப்பட்ட கடிதமே அழைப்பிதழாக கிடைத்துள்ளது என்பதும் அந்த கடிதம் இராஜதந்திர முறைப்படி லண்டன் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக அனுப்பப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.மைத்ரி விக்கிரமசிங்கவின் வாக்குமூலத்தின் படி 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய இருதினங்களில் ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருந்த போது எந்தவொரு இராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ சந்திப்புகளும் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் இது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாடுகள் முரண்பாடாக உள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.தனது சேவைபெறுருக்கு இந்த பயணச் செலவுகள் குறித்து எந்த பொறுப்பும் இல்லை என ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன கூறியுள்ளார்.இந்த பயணத்திற்காக செய்யப்பட்ட செலவுகள் மிக அதிகம் எனவும் இதன்மூலம் சில தரப்பினர் அதிக நன்மை அடைந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டில் பொதுப் பணத்தை எவரும் தன்னிச்சையாகச் செலவிட முடியாது என தெரிவித்தார்.போதுமான சாட்சியங்கள் உள்ளதாலும் ஒரு குற்றவியல் வழக்கின் விசாரணைகளை தாமதப்படுத்துவது அதன் பெறுமதியைக் குறைக்கும் என்பதாலும் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், விசாரணைகளை முடிக்க ஒருமாத காலம் போதுமானது என தெரிவித்தார்.அடுத்த வழக்கு தவணைக்கு முன்னர் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 08ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
