கபில சந்திரசேனவின் மனைவிக்கு பகிரங்க பிடியாணை
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவிற்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று(15) உத்தரவிட்டார்.இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான விசாரணை அதிகாரி முன்வைத்த விடயங்களின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நயோமாலிக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஆங்கில மொழியில் பகிரங்க பிடியாணை பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னரே கோட்டை நீதவான் இந்த உத்தரவை அறிவித்தார்.வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நயோமாலிக்கு நீதிமன்றத்தில் பிணை நின்றவர்களான முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியான பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரை பிணை பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்திடம் கோரினார்.மேலும் 10 மில்லியன் ரூபா பிணை தொகையை அரசுடமையாக்க முடியுமென ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.இதன்போது வழக்கு ஆவணங்களை பரிசீலித்த நீதவான், பிணைத்தொகை 10 மில்லியன் ரூபா அல்ல எனவும் மாறாக 200 இலட்சம் ரூபா பிணைத்தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட வேண்டும் எனவும் அந்த பிணை தொகையை அரசுடைமையாக்குவதற்கு முன்னர் அது குறித்து நீதிமன்றத்திற்கு விடயங்களை சமர்பிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.பிணையாளிகள் இருவருக்கும் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது குறிப்பிட்டார்.அதற்கமைய, முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவிற்கு பிணை நின்ற இருவரின் பிணையை இரத்து செய்தல் மற்றும் பிணை தொகையை அரசுடைமையாக்குவது தொடர்பான காரணங்களை எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.இந்த வழக்கு எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
-557396.jpg)