நாடு கடத்தப்பட்ட 21 குற்றவாளிகள்
துபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 21 குற்றவாளிகளில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இரண்டு குற்றவாளிகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கொழும்பு குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.பொரளை, வணாத்தமுல்ல, கொழும்பு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த குற்றவாளிகளே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இவர்களில் சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த இருவர் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.குறித்த இருவரும் பல கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் ஆயுதக் கட்டத்தல்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
