FCID-யில் இன்று முன்னிலையாக முடியாது - ஷிரந்தி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளார்.'சிரிலிய எனும்' பெயரில் நடத்திச் செல்லப்பட்ட வங்கி கணக்கில் நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இன்று காலை 09.30-க்கு ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஷிரந்தி ராஜபக்ஸ சட்டத்தரணி ஊடாக தனக்கு இருவார கால அவகாசம் வழங்குமாறு அறிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் சிரிலிய எனும் பெயரில் நடத்திச் செல்லப்பட்ட வங்கிக் கணக்கில் நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நல்லாட்சி அரசாங்கத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.ஷிரந்தி ராஜபக்ஸ உள்ளிட்ட மூவரின் கூட்டுக்கணக்காக அரச வங்கியொன்றின் சுதுவெல்ல கிளையில் சிரிலிய சவிய கணக்கு திறக்கப்பட்டிருந்தது.வங்கிக் கணக்கை திறப்பதற்காக வழங்கப்பட்ட தகவலில் குறித்த மூவரின் முகவரி கார்ல்டன் தங்காலை இல்லம் என கூறப்பட்டிருந்தது.ஷிரந்தி ராஜபக்ஸவின் தேசிய அடையாள அட்டை இலக்கம் 222222222V என குறிப்பிடப்பட்டிருந்தது.சாதாரணமாக பழைய தேசிய அடையாள அட்டை எண்ணின் முதல் 02 இலக்கங்கள் பிறந்த வருடத்தை குறிப்பதுடன் இவ்வாறான இலக்கமொன்று காணப்படாது.தனது வௌிநாட்டு கடவுச்சீட்டின் இலக்கமே அவ்வாறு அமைந்துள்ளதாக ஷிரந்தி உள்ளிட்ட தரப்பினர் அப்போதைய அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரிவித்திருந்தனர்.வங்கியின் கணினி கட்டமைப்பில் தரவுகளை உள்ளிடும்போது பிழை ஏற்பட்டுள்ளதாக தெரிவதாக வங்கிக் கணக்குக்கு போலி அடையாள அட்டைக்கான எண்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஷிரந்தி ராஜபக்ஸ தரப்பினர் கூறியிருந்தனர்.இந்த வங்கிக் கணக்கினூடாக சந்தேகத்திற்குரிய பல்வேறு கொடுக்கல் வாங்கல்கள் செய்யப்பட்டதுடன் நல்லாட்சி அரசாங்க காலத்தில் அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.2015 ஜூன் முதலாம் திகதி ஷிரந்தி ராஜபக்ஸவை பொலிஸ் குற்ற விசாரணை பிரிவிற்கு வருகை தருமாறு கூறப்பட்டிருந்தாலும் அவர் வருகை தரவில்லை.பாதுகாப்பானதொரு இடத்தில் அவரிடம் வாக்குமூலம் பெற்றதாக பொலிஸார் பின்னர் தெரிவித்திருந்தனர்.பிரபல ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தொடர்பில் சிரிலிய சவிய மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.இந்த கொலை தொடர்பில் சிரிலிய சவிய அறக்கட்டளைக்கு சொந்தமான WP KA-0642 என்ற இலக்கங்களைக் கொண்ட Defender ரக வாகனம் வசிம் தாஜுதீனை கடத்தப் பயன்படுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் 2018 செப்டம்பர் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஷானி அபேசேகர உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.இறுதியில் 2019 ஆகஸ்ட் 18ஆம் திகதி தாஜுதீன் கொலை தொடர்பான சகல விசாரணைகளையும் நிறுத்தவுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் அப்போதைய பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்திருந்தது.எவ்வாறாயினும் வசிம் தாஜுதீன் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்தது.
