தேசிய முந்திரிகைத் தொழிலின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆதரவை வழங்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தயார்
இலங்கையின் முந்திரிகைச் செய்கை அபிவிருத்தி மற்றும் நடுகைத் திறனை அதிகரிப்பதற்காக பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் தேசிய முந்திரிகைத் தொழிலின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆதரவை வழங்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தயாராக உள்ளது. ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக, தோட்டப் பயிரான முந்திரிகைத் துறை எதிர்கொள்ளும் தற்போதைய மற்றும் எதிர்கால தொழில்நுட்ப, ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டு சவால்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்காக, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் தலைமையில் ஒரு பங்குதாரர் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், உள்நாட்டு முந்திரிகைத் துறையின் தற்போதைய நிலை, முறைப்படியான உற்பத்தி செய்யப்படும் பரப்பளவு, அதன் அதிகரிப்பு மற்றும் அதற்கான பின்னணி ஆகியவை ஆராயப்பட்டன. இலங்கையில் ஒரு முந்திரிகை மரத்தின் சராசரி அறுவடை சுமார் 4-5 கிலோவாக உள்ளது என்றும், ஏனைய நாடுகளில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இது சுமார் 20 கிலோவாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது. நாட்டில் மேம்பட்ட முந்திரிகை உற்பத்திக்கு ஆண்டுக்கு சுமார் பத்து இலட்சம் நாற்றுகள் தேவைப்பட்டாலும், தற்போது 3-4 இலட்சம் நாற்றுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும், இதற்குத் தீர்வாக, 10 ஆண்டுகால எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தேவையான ஒட்டுக்கன்றுகளை வளர்க்க ஒரு அறிவியல் முறை தேவை என்றும் பங்குதாரர்கள் சுட்டிக்காட்டினர். புதிய முந்திரி இரகங்களைக் கண்டறியவும், அறுவடையை அதிகரிக்கவும், தேவையான ஒட்டுக்கன்றுகள் மற்றும் தரமான விதைகளை உற்பத்தி செய்வதில் உள்ள தற்போதைய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப இடைவெளிகளை நிரப்பவும், மேம்பட்ட திசு வளர்ப்பைப் பரப்பவும் அமைச்சின் கீழ் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். ஆராய்ச்சி முன்னுரிமைப் பகுதிகளைக் கண்டறிவதன் மூலம், இலக்கு சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு நிதி வழங்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும் குறிப்பிட்ட அவர், பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே மூலோபாய உறவுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும், வலுவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) கீழ் ஏனைய நாடுகளில் இருந்து அதிக அறுவடை தரும் மரபணு வளங்களை ( germplasm) இறக்குமதி செய்வதற்கான பொறிமுறை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இதன்போது, முந்திரிகை மரத்தின் மூலம் பெறுமதி சேர்க்கப்பட்ட உப பொருட்களை உருவாக்குதல், பயிர் பல்வகைப்படுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. முந்திரி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான முன்முயற்சியை எடுத்த விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்குப் பங்குதாரர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள், இலங்கை முந்திரிகைக் கூட்டுத்தாபனம் மற்றும் WYO பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள், தனியார் துறை முந்திரி விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்
