Online ஊடாக சாட்சியமளிக்க கோட்டாபயவிற்கு அனுமதி
லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இணையவழி(Online) ஊடாக சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.லலித் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.2011 டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவர்களது உறவினர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஸவிற்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் 2019ஆம் ஆண்டு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
